நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Monday, October 31, 2011

ஏடிஎம் கொள்ளையர்கள் - விழிபிதுங்கி மக்கள்



சென்னையில் உள்ள பல்வேறு வங்கிகளில் போலி டெபிட் கார்டுகள் மற்றும் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி ஆயிரக்கணக்கில் பணம் சூறையாடப்பட்டு வருகிறது. இதனால் வங்கிகளில் பணம் போட்டு வைத்திருப்போர் பெரும் தவிப்புக்குள்ளாகியுள்ளனர்.

நவீன முறையில் நடந்து வரும் இந்த சைபர் குற்றச் செயலால் வங்கிகளில் போட்டு வைத்திருக்கும் பணத்திற்கு உத்தரவாதம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளின் முக்கியத் தகவல்களை நூதன முறையில் திருடி அவற்றை வைத்து போலி கார்டுகள் தயாரித்து அவற்றின் மூலம் ஏடிஎம் மையங்களில், வாடிக்கையாளர்களின் பணத்தை அபகரித்து வருகிறது ஒரு கும்பல். இந்த திருட்டால் வங்கிகளில் பணம் போட்டு வைத்திருப்போர் அவற்றைப் பறி கொடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த கும்பலைச் சேர்ந்த 3 பேரை இதுவரை போலீஸார் கைது செய்துள்ளனர். இதில் ஒருவர் இலங்கையைச் சேர்ந்தவர்.

இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிட்டத்தட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட வங்கிகளின் வாடிக்கையாளர்களின் போலி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்த கம்ப்யூட்டரை சோதனையிட்டபோது அதில் நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்களின் (இவற்றில் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களின் விவரங்களும் அடக்கம்) டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து இன்டர்போல் மூலம் சம்பந்தப்பட்ட நாடுகளில் உள்ள வங்கிகளுக்கு சென்னை போலீஸார் எச்சரிக்கைச் செய்தியை அனுப்பியுள்ளனர். போலி டெபிட், கிரெடிட் கார்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ள வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்குகளை முடக்கி பணத்தைக் காக்குமாறு அந்த வங்கிகளை அறிவுறுத்துமாறு காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த நிலையில் தினசரி சென்னை காவல்துறைக்கு இந்த ஏடிஎம் திருடர்களால் பணத்தைப் பறி கொடுத்து விட்டு பலரும் புகாருடன் வந்தவண்ணம் உள்ளனர். இந்த நெட்வொர்க்கில் மேலும் பலர் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. இதையடுத்து அவர்களை வளைத்துப் பிடிக்க போலீஸார் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

இதுவரை 150 பேர் வரை புகார் கொடுத்துள்ளனர். ஆனால் புகார்களின் எண்ணிக்கை தினசரி அதிகரித்து வருவதால் ஏடிஎம் கொள்ளைக் கும்பல் பெருமளவில் நகரில் நடமாடுவதாக போலீஸார் அஞ்சுகிறார்கள். இதையடுத்து வாடிக்கையாளர்கள் தங்களது கார்டுகளை ஏடிஎம் மையங்களில் பயன்படுத்தும்போது மிகவும் கவனமாக இருக்குமாறு அவர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்தக் கும்பலின் தலைவனாக செயல்படும் நபர் இன்னும் சிக்கவில்லை. அவனைப் பிடிக்க போலீஸார் தீவிர நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளன். சைபர் கிரைம் போலீஸார் தனிப்படை அமைத்து இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

ஏடிஎம் மையங்களில் கண்காணிப்பை அதிகரிக்குமாறு அனைத்து வங்கிகளையும் போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர். ஏடிஎம் மையங்களுக்கு பணம் எடுக்க வருவோரை தீவிரமாக கண்காணிக்குமாறும், ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் இல்லாத மையங்களில் உடனடியாக அவற்றைப் பொருத்துமாறும் போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

ஈழ விடுதலை நோக்கி தமிழ் சினிமாவின் பார்வை

இயக்குனர் சேரன் தயாரித்து அமுதன் இயக்கிய தொடரும் நீதிக்கொலைகள்என்ற ஆவணப் படம் வெளியிடப்பட்டது. அதில் நடிகர் சத்யராஜ் கலந்துகொண்டார். 

அப்போது பேசிய சத்யராஜ், இரண்டாம் உலகப்போருக்கு பிறகு வெளிவந்த பெரும்பாலான ஆங்கிலப் படங்கள்  அதை தழுவியே எடுக்கப்பட்டன. அதேபோல் இனி தமிழகத்தில் வெளிவரும் பெரும்பாலான தமிழ் படங்கள் ஈழ விடுதலையை சார்ந்ததாகவே இருக்கும்.
 
சினிமா வியாபாரம் சம்பந்தப்பட்டது. ஏன்னா போட்ட பணத்தை எடுக்கத்தான் எல்லாரும் நினைப்பாங்க. எந்த விஷயத்துக்காக மக்களின் கைதட்டல் அதிகமாக கிடைக்கிறதோ அது தான் அதிகமாக படத்தில் வரும். சில்க்கின் கவர்ச்சி நடனத்துக்கு கைதட்டல் கிடைத்தால், அந்த கவர்ச்சி நடனத்தை எல்லா படத்திலும் வைப்போம்.  கவுண்டமணி, செந்தில் காமெடிக்கு கைதட்டல் அதிகமாக கிடைத்தால்,

அதை எல்லா படத்திலும் வைப்போம். எதற்கு தியேட்டடில் மக்கள் கை தட்டுகிறார்களோ அதை நோக்கி சினிமாவின் பார்வை திரும்பும். இன்று ஈழ விடுதலை நோக்கி தமிழ் சினிமாவின் பார்வை திரும்பி உள்ளது.

இப்போது வெடிஎன்ற படம் வெளியாகி இருக்கிறது. விஷால் அதில் நடித்திருக்கிறார். அது சராசரியான மசாலா படம் தான். அந்த படம் பற்றி உங்களுக்கு பல விமர்சனங்கள் இருந்தாலும், அதில் ஹீரோ விஷால், என் பெயர் பிரபாகரன், எனக்கு பயம்ன்னா என்னனு தெரியாது என்ற வசனத்தை பேசும் போது, தியேட்டர் இடிந்து போகிற மாதிரி கைத்தட்டல் கிடைத்திருக்கிறது.

அதேபோல சூர்யாவின் 7ஆம் அறிவுபடத்தில் ஈழம் விடுதலை சம்பந்தமான பல வசனங்கள் இடம் பெற்றிருக்கிறது. அந்த வசனங்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதுதான் தமிழர்களின் உணர்வு.

எல்லாரும் வீதியில் இறங்கி போராடும் நிலைமை இல்லை. அதற்கு அவர்களுடைய சூழல், குடும்ப சூழல் என பல பிரச்சனைகள் இருக்கிறது. எல்லாரும் போராட வீதிக்கு வரவில்லை என்பதற்காக தமிழர்களுக்கு உணர்வு இல்லை என்று அர்த்தமாகிவிடாது.

எனவே ஈழ விடுதலைக்கு மாணவர்கள் மத்தியிலும் இளைஞர்கள் மத்தியிலும் மிகப்பெரிய ஆதரவு திரண்டு வருகிறது, எனவே ஈழ விடுதலை பற்றி மேலும் பல படங்கள் வெளிவரும் என்றார்.


ரேப் சீனுக்கு கூப்பிடுறாங்க

பாலியல் பலாத்கார காட்சிகள் நடிக்கத் தான் என்னை அதிகம் அழைக்கிறார்கள் என்று பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் வருத்தப்படுகிறார்.

நடிகை ராக்கி சாவந்த் தனது நடிப்பை விட சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். ஏதாவது வாயைக் கொடுத்து வம்பில் மாட்டிக் கொள்வார். சமீபத்தில் பாபா ராம்தேவை திருமணம் செய்து கொள்ள ஆசை என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த நிலையில் ராக்கி வித்தியாசமாக ஒரு புலம்பலை வெளியிட்டுள்ளார். எனக்கு பலாத்கார காட்சிகளில் நடிக்கத் தான் வாய்ப்புகள் வருகின்றது. ஆனால் எனக்கு உடம்பைக் காட்டி நடிக்க எனக்கு விருப்பமில்லை. என்னை ஏன் இப்படிபட்ட காட்சியில் நடிக்க கூப்பிடுகிறார்கள் என்று வருத்தமாக உள்ளது என்று ராக்கி தெரிவித்துள்ளார். மேலும் கூடவே, ஜான் ஆபிரகாம் மற்றும் தீபிகா படுகோனேவையும் வம்புக்கிழுத்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது,

நான் ஆடும் பாடல்கள் ஆபாசமாக உள்ளது என்று தணிக்கை குழு நிராகரிக்கிறது. ஆனால் என் பாடல்களை விட ஆபாசமான 200 பாடல்களை என்னால் காட்ட முடியும்( எடுத்துக்காட்டாக ஜான் ஆபிகாம் மற்றும் தீபிகா படுகோனே பாடல்கள்). கான், கபூர், பச்சன் குடும்பத்தைச் சேர்ந்தவள் அல்ல என்பதற்காக தணிக்கைக் குழு என்னையே குறி வைக்கக் கூடாது.

இத்தனை நாட்களாக டிவியில் கவனம் செலுத்தினேன். தற்போது புதிய உதவியாளரை பணியமர்த்தியுள்ளேன். விரைவில் என்னை பெரிய திரையில் பார்க்கலாம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சிரஞ்சீவி, அவரது மகன் ராம் சரண் தேஜாவுடன் நடிக்க ஆசையாக உள்ளது என்றார்.

நம்புங்கள்... அரசுத் துறைகளில் லஞ்சம் கிடையாது

வரும் 31ம் தேதி முதல் வரும் 5ம் தேதி வரை, நாடு முழுவதும் அரசு அலுவலகங்களில், லஞ்ச எதிர்ப்பு வாரம் அனுசரிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், அடுத்த வாரம் மத்திய, மாநில அரசுப் பணிகளை லஞ்சம் கொடுக்காமல் முடிக்க முடியும் என, பல்வேறு தரப்பில் நம்புகின்றனர்.

உலகம் முழுவதும் ஊழல் பெருத்து விட்டது. ஊழல் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது எந்த நாடு? எந்த துறை? கடைசியில் இருப்பது எந்த நாடு? எந்த துறை? என்று, ஆண்டுதோறும் ஆய்வு நடத்தி, பட்டியல் தயாரிக்கும் நிலை வந்துள்ளது.கடந்த ஆண்டில், 180 நாடுகளில் எடுக்கப்பட்ட சர்வதேச ஆய்வின் படி, இந்தியா 87வது ஊழல் நாடாக உள்ளது. முதலிடத்தில், நியூசிலாந்து, சிங்கப்பூர் மற்றும் டென்மார்க் நாடுகள் உள்ளன. முதலில், 110 வது இடத்தில் இருந்த இந்தியா, 10 ஆண்டுகளில் படிப்படியாக ஊழல் நடவடிக்கைகளில் முன்னேறி, 87வது இடத்தை பிடித்துள்ளது.

இந்நிலையில், வரும் 31ம் தேதி முதல் வரும் 5ம் தேதி வரை, லஞ்சம் மற்றும் ஊழல் எதிர்ப்பு வாரம் கடைபிடிக்க வேண்டுமென, மத்திய ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.இதுதொடர்பாக மத்திய அரசின் துறை செயலர்கள், மாநில அரசு தலைமை செயலர்கள், பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள், மத்திய, மாநில அரசின் கல்வி மையங்கள், பணியாளர் தேர்வாணையங்கள், அரசு மற்றும் அரசு சார்ந்த தன்னாட்சி நிறுவனங்கள், அமைப்புகள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள், மத்திய, மாநில அமைச்சரகங்கள், அனைத்து துறைகளின் தலைமை லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு அதிகாரிகள் ஆகியோருக்கு, சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அதில் கூறியிருப்பதாவது:லஞ்சம் மற்றும் ஊழல் வாரம் குறித்த விழிப்புணர்வு தகவல்களை, அரசுத்துறை அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில், பொதுமக்களின் பார்வையில் படும்படி, பேனர்கள் மற்றும் அறிவிப்புகளாக வைக்க வேண்டும். ஊழல் மற்றும் லஞ்ச எதிர்ப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் இதுதொடர்பாக போட்டிகள் நடத்தி பரிசு தர வேண்டும்.ஊழல் எதிர்ப்பு அமைப்புகளுடன் இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும். ஊழல் எதிர்ப்பு குறித்து பிரபலமானவர்கள் அல்லது நிபுணர்களை கொண்டு, பிரசாரம் செய்ய வேண்டும். அக்டோபர் 31ம் தேதி, காலை 11 மணிக்கு, சம்பந்தப்பட்ட அனைத்து அலுவலகங்கள் மற்றும் வளாகங்களில், ஊழல் மற்றும் லஞ்சத்திற்கு எதிரான உறுதிமொழி எடுக்க வேண்டும்.இந்த நிகழ்ச்சிகளை சிறப்பாக முடித்து, அதன் பாசிட்டிவான அறிக்கைகளை, நவம்பர் 15ம் தேதிக்குள் மத்திய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஊழல் அதிகரிப்பதற்கு, லஞ்சம் கொடுத்து இளைஞர்கள் வேலைக்கு சேர்வதே முதல் காரணம் என ஆய்வுகள் கூறுகின்றன. கடந்த காலங்களில், பெரிய அளவிலான ஊழல்களில், சில மத்திய, மாநில அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் ஈடுபட்டுள்ளனர். அரசுத்துறைகளில் பணிகள் முடிவதற்கு பெரிய அளவில் லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது.இதற்கிடையில், வரும் வாரத்தில் ஊழல் எதிர்ப்பு வாரம் அனுசரிக்கப்படும் நிலையில், மத்திய, மாநில அரசுத்துறைகளில், அலுவலக உதவியாளர், பாதுகாவலர் முதல் உயர் பதவியிலுள்ள அதிகாரிகள் வரை, யாருக்கும் லஞ்சம் கொடுக்காமல், பணிகளை முறையாக முடிக்கலாம் என நம்புவோம்.

ஊழல் துறைகள்:லஞ்சம் கொடுத்து வேலைவாய்ப்பு, வரி ஏய்ப்பு, மாநில எல்லைகளில் பொருட்கள் கடத்தலுக்கு லஞ்சம், சான்றிதழ்கள் பெற லஞ்சம், அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான நிலஅபகரிப்பு மற்றும் ஆவண தயாரிப்புக்கு லஞ்சம், அரசுத்துறை டெண்டர் மற்றும் கான்ட்ராக்ட் பெற லஞ்சம், போலி மருந்துகள் மற்றும் மருத்துவ ஆவண ஊழல், வருமானவரி ஏய்ப்பு, சட்டவிரோதமாக கனிமங்கள் உட்பட இயற்கை வளங்களை சுரண்ட லஞ்சம், தரம் குறைந்த பொருட்களை விற்க லஞ்சம், போலியாக விசா, பாஸ்போர்ட் பெற லஞ்சம், போலீஸ் துறையில் வழக்குகளை முடிக்க லஞ்சம்...இப்படி நீண்டுகொண்டே போகும்.

Sunday, October 30, 2011

3 பேரை தூக்கில் போட வேண்டும் - தமிழக அரசின் நிலையா?

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில், தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனு அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் அளிக்கிறது.


மரண தண்டனை விதிக்கப்பட்ட 3 பேருக்கும் கருணை காட்டித் தண்டனைக் குறைப்புச் செய்ய வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக அரசு, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில், அவர்களின் மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறியிருப்பது முன்னுக்குப்பின் முரணானதாகும்.


3 பேரின் மனுக்களை நிராகரிக்கலாம் என்று பதில் மனு தாக்கல் செய்கிறது என்றால், அவர்களை தூக்கில் போட வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் சட்டப்பூர்வமான நிலையா என்று நாம் தமிழர் கட்சி கேள்வி எழுப்புகிறது.


அப்படியானால், அவர்களுக்கு கருணை காட்டுமாறு கோரி சட்டப் பேரவையில் நிறைவேற்றிய தீர்மானத்திற்கு என்ன பொருள்? இதனை முதல் அமைச்சர் தமிழ்நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும். தமிழக அமைச்சரவையைக் கூட்டி தண்டனைக் குறைப்புத் தீர்மானம் நிறைவேற்றி, தமிழக அரசின் பரிந்துரையாக ஆளுநருக்கு அனுப்பி, தமிழக மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டும்.


இவ்வாறு சீமான் அறிக்கையில் கூறியுள்ளார்

நடிகைகளின் 'தொடைகளுக்கு' தடை?


பொது நிகழ்ச்சிகளுக்கு வரும் நடிகைகள் தொடை தெரிய உடை அணிவதற்கு தடைவிதிக்க நடிகர் சங்கம் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

திரைப்பட பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்பவர்கள் படத்தை பற்றி மட்டும் தான் பேச வேண்டும். தேவையில்லாத விஷங்களைப் பற்றி பேசக் கூடாது. அவ்வாறு பேசுவதால் தான் பிரச்சனை கிளம்புவதால் இனி தேவையில்லாதவற்றை பேச தடைவிதிக்க இயக்குனர் சங்கம் முடிவு செய்துள்ளதாக கோலிவுட்டில் பேச்சு அடிபடுகிறது.

இது மட்டுமின்றி பொது நிகழ்ச்சிகளுக்கு வரும் நடிகைகள் தொடை தெரியும் அளவுக்கு உடை அணியவும் தடை விதிக்கப் போவதாகப் பேசப்படுகிறது. சேலைக்கு பெயர் போன தமிழகத்தில் நடக்கும் சினிமா விழாக்களில் கலந்து கொள்ளும் நடிகைகள் குட்டி, குட்டியாகத் தான் உடை அணிந்து வருகிறார்கள். தொடை தெரியும் அளவுக்கு உடை அணிந்து வந்துவிட்டு பிறகு இப்படி போட்டோ எடுக்காதீர்கள், அப்படி எடுக்காதீர்கள் என்று பத்திரிக்கை புகைப்படக்காரர்களிடம் கோபித்துக்கொள்வது அதிகரித்து வருகிறது.

பார்ப்பவர்கள் மனதை கலவரப்படுத்தும் வகையில் உடை அணிவது அப்புறம் நான் எனக்கு பிடித்த மாதிரி தான் டிரெஸ் போடுவேன் ஆனால் என்னை யாரும் குறை சொல்லக் கூடாது என்று குறை கூறுவது அதிகரித்து வருகிறது. தற்போது அதற்கு தடை விதிக்க நடிகர் சங்கம் யோசித்து வருவதாக செய்திகள் கூறுகின்றன.

உங்கள் மண வாழ்க்கை உறுதியானதா ? ஒரு சிறு சோதனை

பொதுவாக நாம் மோதிரத்தை நமது கையின் நான்காவது விரலில் அதாவது மோதிர விரலில் போட்டுக் கொள்கிறோம். திருமண நிச்சயதார்த்தம் அல்லது திருமணத்தின் போது மணமகளின் மோதிர விரலில்தான் மணமகன் மோதிரம் அணிவிக்கிறார்.

இவ்வாறு குறிப்பாக திருமண சடங்குகளின் போது நான்காவது விரலில் மோதிரம் அணிவிப்பதற்கு பின்னணியில் சுவாரஸ்யமான அதே நேரத்தில் ஏற்றுக் கொள்ளக் கூடிய கதை ஒன்று உண்டு.

இப்போது நமது கை விரல்களை எடுத்துக் கொள்வோம். முதல் விரலான கட்டை விரல் உங்கள் பெற்றோர்களை குறிக்கிறது. இரண்டாம் விரலான ஆட்காட்டி விரல் உங்களுடன் பிறந்த சகோதர, சகோதரிகளை குறிக்கிறது. மூன்றாம் விரலான நடு விரல் உங்களை குறிக்கிறது. நான்காம் விரலான மோதிர விரல் உங்கள் இல்வாழ்க்கை துணையை குறிக்கிறது. ஐந்தாம் விரலான சுண்டு விரல் உங்கள் குழந்தைகளை குறிக்கிறது.

இப்போது உங்கள் இரண்டு கைகளையும் எடுத்து கீழ்வரும் படத்தில் உள்ளவாறு வைத்துக் கொள்ளுங்கள்.



அதாவது ஒரு கையில் உள்ள நடு விரல் தவிர மற்ற எல்லா விரல்களையும் நீட்டி வைத்து அவ்வாறே மற்றொரு கையிலும் செய்து கொண்டு இப்போது இரண்டையும் ஒன்றுடன் ஒன்று ஒட்டி இருக்குமாறு வைத்துக் கொள்ளவும். நடு விரல் நீங்கள் என்பதால் அது இந்த விளையாட்டிற்கு ஒரு ஒப்புக்கு சப்பா. எனவே அந்த விரலை மடக்கி ஒட்டி வைத்துக் கொள்ளவும்.

அடுத்து ஒன்றுடன் ஒன்றாக ஒட்டி இருக்கும் உங்கள் கட்டை விரல்களை மட்டும் மெல்ல விலக்கவும். (கவனிக்க : இவ்வாறு செய்யும் போது ஒட்டி இருக்கும் மற்ற விரல்களை பிரித்து விடக்கூடாது.) அவற்றை உங்களால் விலக்க அதாவது பிரிக்க முடியும். கட்டை விரல் என்பது உங்கள் பெற்றோர்கள். அவர்கள் உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட காலம் வரைதான் அரவணைப்பாக இருப்பார்கள்.

அடுத்து ஆட்காட்டி விரல்கள் . இவற்றையும் அவ்வாறே விலக்க முடியும். ஏற்கனவே சொன்னவாறு ஆட்காட்டி விரல் என்பது உங்களுடன் பிறந்தவர்கள். இவர்கள் நாளாவட்டத்தில் தங்களுக்கென ஒரு குடும்பம் அமைத்துக் கொண்டு பிரிந்து விடுவார்கள்.

தொடர்ந்து வருவது நடு விரல்கள் . இவற்றை நீங்கள் ஒன்றும் செய்ய வேண்டியதில்லை. ஏனெனில் இவை நீங்கள்.

இதை அடுத்து மோதிர விரல்கள் . இவற்றை பிரிப்பதற்கு முன் இதற்கு பிறகு வரும் சுண்டு விரல்களை பிரிக்க முடிகிறதா என்று பாருங்கள். இதையும் பிரிக்கலாம். அதாவது சுண்டு விரல் என்பது உங்கள் குழந்தைகள். இவர்கள் வளர்ந்து தங்களுக்கென கணவன்/மனைவி என்று அமைத்துக் கொண்டு சென்று விடுவார்கள்.

இப்போது மோதிர விரல்களுக்கு வருவோம். ஒன்றுடன் ஒன்று ஒட்டி இருக்கும் மோதிர விரல்களை பிரிக்க முடியுமா? நிச்சயமாக முடியாது. ஏனெறால் மோதிர விரல்கள் உங்கள் இல்வாழ்க்கை துணைவி/ துணைவரை குறிக்கின்றது.

இல்வாழ்கை பந்தம் பிரிந்து விடக் கூடாது, உறுதியானதாக இருக்க வேண்டும் என்பதற்காகவே திருமணத்தின் போது மோதிர விரலில் மோதிரம் அணிவிக்கப்படுகின்றது

தி(ரு).மு.க கட்டுப்பாட்டில் தி.மு.க., இல்லை!

""கருணாநிதியின் கட்டுப்பாட்டில் தி.மு.க., இல்லை, என, தி.மு.க., துணை பொதுச் செயலராக இருந்த பரிதி இளம்வழுதி குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து, அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: சட்டசபைத் தேர்தலின் போது, கட்சி விரோத செயல்பாடுகளில் ஈடுபட்டவர்கள் குறித்து புகார் அளித்தேன். அதன்படி, அவர்கள் மீது கட்சி நடவடிக்கை எடுத்தது. ஆனால், எவ்வித விளக்கமும் பெறாமல் அவர்கள் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளனர். புகார் கொடுத்த என்னிடமும், விளக்கம் பெறவில்லை.

இதுபோல, மாநிலம் முழுவதும் கட்சி மீது அதிருப்தி கொண்டவர்கள் உள்ளனர். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல, என் பிரச்னை உள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள அதிருப்தியாளர்களை ஒன்றிணைக்கும் வாய்ப்பு ஏற்பட்டால், அதை செய்வேன்.

என் ராஜினாமா கடிதத்தை ஏற்கும் முடிவை, கட்சித் தலைவர் கருணாநிதி மனப்பூர்வமாக செய்திருக்க மாட்டார். அவரைத் தாண்டி உள்ள அதிகார மையம் தான், இதைச் செய்துள்ளது. கருணாநிதியின் கட்டுப்பாட்டில் கட்சி இல்லை. இப்பிரச்னை எழுந்த நிலையில், பொருளாளர் ஸ்டாலினை சந்திக்க நான்கு முறை முயற்சித்தேன். ஆனால், அவர் என்னை சந்திப்பதை தவிர்த்து விட்டார். அதற்கு காரணம் என்வென்று தெரியவில்லை.

கட்சித் தலைமையை சந்தித்து, விளக்கம் கொடுக்கவும் நான் செல்லவில்லை. கருணாநிதியையும், ஸ்டாலினையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் சந்திப்பேன். எழும்பூர் தொகுதி தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர் மற்றும் கட்சி பேச்சாளர் ஆகிய பொறுப்புகளில் உள்ளேன். கட்சியில் தொடர்ந்து என் பணியைச் செய்வேன்.

என் போன்றவர்களையும், அடக்கி வைக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களையும் கைதூக்கி விடவே தி.மு.க., துவங்கப்பட்டது. இந்நிலையில், தாழ்த்தப்பட்டவன் என்பதற்காக என் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டனர் என சொல்ல முடியாது.

அ.தி.மு.க., அரசு வழக்கு தொடரும் என பயந்து, கட்சியை விமர்சிப்பதாகக் கூறுவதை ஏற்க மாட்டேன். கடந்த 1991 மற்றும் 2001ம் ஆண்டுகளில், அ.தி.மு.க., அரசுக்கு எதிராக தனியொரு நபராகச் செயல்பட்டவன். எனவே, அ.தி.மு.க., அரசு வழக்கு தொடரும் என்பதற்கு பயந்து, கட்சியை விமர்சிக்கவில்லை. இவ்வாறு பரிதி இளம்வழுதி கூறினார்

வேகம் குறையும்வரை நடிப்பேன்: ரஜினிகாந்த் உருக்கம்

 "என் வேகம் குறையும் வரை நடிப்பேன்' என்று நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற சங்கர நேத்ராலயா விருது வழங்கும் விழாவில் உருக்கமாகப் பேசினார்.
 
சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை சார்பில் தமிழ் திரைப்பட இயக்குநர் எஸ்.பி. முத்துராமனின் கலைச் சேவையைப் பாராட்டி சங்கர ரத்னா விருது வழங்கப்பட்டது. இந்த விருதை கம்பன் கழகத் தலைவர் இராம.வீரப்பன் வழங்கினார்.
உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னர் ஓய்வு எடுத்து வந்த நடிகர் ரஜினிகாந்த் முதல் முறையாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
விழாவில் ரஜினிகாந்த் பேசியது:
உடல்நிலை தேறிய பின்பு, இதுபோன்ற நல்ல நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டும் என நினைத்திருந்தேன்.
ரசிகர்களின் பிரார்த்தனையாலும், ஆண்டவனின் ஆசிர்வாதத்தாலும் இப்போது முழுவதும் குணமடைந்துள்ளேன். எஸ்.பி.முத்துராமன் வெற்றி படங்கள் கொடுத்ததால் மட்டும் அவருடன் சேர்ந்து படம் செய்யவில்லை. அவருடைய அன்புக்காகத்தான் அவருடன் இனணந்து படத்தில் நடித்தேன்.
ஓய்வு எடுக்காமல் தொடர்ந்து சுறுசுறுப்பாக இயங்க வேண்டும் எனக் குறிப்பட்டனர். ஆனால் சிவாஜியைப் போலவோ, கமலைப் போலவோ என்னிடம் நல்ல நடிப்பும், திறமையும் இல்லை. எனது பலமே எனது வேகம்தான். அந்த வேகம் குறைந்தால் என்னால் நடிக்க முடியாது. என் வேகம் குறையும் வரை நடிப்பேன் என்றார் ரஜினி

வெங்காயத்தின் மருத்துவ குணங்கள்


வெங்காயம் இல்லாமல் உணவுப் பண்டங்கள் சுவையாக இருக்காது. வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெயாகும். இதுவே வெங்காயத்தின் இருக்கும் எமது கண்களில் பட்டு கண்ணீர் வரவும் காணமாக இருக்கிறது.
வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், விட்டமின்கள் என்பன உடம்புக்கு ஊட்டச்சத்தினைத் தருகிறது. வெங்காயத்தை எப்படி பயன்படுத்தினால், என்ன பலன்கள் கிடைக்கும்? என்பதை பார்ப்போம்.

நான்கைந்து வெங்காயத்தின் தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட்டு வர பித்தம் குறையும்.

 வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில் விடுவதால் காது இரைச்சல் நீங்கும்.

வெங்காயத்தைத் துண்டுகளாக வெட்டி சிறிது இலவம் பிசினைத்தூள் செய்து அதனுடன் சேர்த்து சிறியளவு கற்கண்டுடன் பாலைச் சேர்த்து அருந்திவர எல்லா மூலக்கோளாறுகளும் நீங்கும்.

வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து, பிசைந்து மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்துக்கட்ட கட்டிகள் உடனே பழுத்து உடையும்.

வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும்.

 வெங்காயச் சாற்றையும், சுடுநீரையும் கலந்து வாய் கொப்பளித்து வரலாம் அல்லது வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.

வெங்காயத்தை அவித்து தேன், கற்கண்டு சேர்த்து சாப்பிட உடல் பலமாகும். 

வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும் பால் சாப்பிட ஆண்மை பெருகும்.

திடீரென மூர்ச்சையானால் வெங்காயத்தை கசக்கி முகரவைத்தால் மூர்ச்சை தெளியும்.

வெங்காயம் குறைவான கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம்.

பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தை தரும்.

பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது. தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.

வெங்காயச் சாற்றுடன், கடுகு எண்ணெய் கலந்து கீல் வாயு காரணமாக மூட்டுக்களில் ஏற்படும் வலி நேரத்தில் தடவிவர வலி குணமாகும்.

நறுக்கிய வெங்காயத்தை முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கும்.

வெங்காயச் சாற்றோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடி சாப்பிட்டுவர, மாலைக்கண் நோய் சரியாகும்.

வெங்காயச் சாறையும், தேனையும் சம அளவு கலந்து கண்வலிக்கு ஒரு சொட்டுவிட கண்வலி, கண் தளர்ச்சி நீங்கும். வெங்காயத்தை அரைத்து தொண்டையில் பற்றுப்போட ஏற்படும் தொண்டை வலி குறையும்.

பாம்பு கடித்துவிட்டால் நிறைய வெங்காயத்தைத் சாப்பிட வேண்டும். இதனால் விஷம் இறங்கும்.

தலையில் திட்டுத்திட்டாக முடி உதிர்ந்து வழுக்கை விழுந்திருந்தால் சிறு வெங்காயத்தை இரு துண்டாக நறுக்கி தேய்த்துவர முடிவளரும்.

தேள்கடித்த இடத்தில் வெங்காயத்தை நசுக்கித் தேய்க்க விஷம் இறங்கும். வெங்காயத்தை அரைத்து முன் நெற்றி, பக்கவாட்டு நெற்றியில் பற்றுப் போட தலைவலி குறையும்.

Saturday, October 29, 2011

iPhone மூலம் நிர்வாணமாக பார்க்ககூடிய மென்பொருள்

தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒன்றாக ஜபோன் இப்போது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த ஜபோன் கெமராவில் ஒரு விசேட மென்பொருள் மூலம் சாதாரணமான ஆடையுடன் வருபவர்களை ஆடைகளை நீக்கி நிர்வாணமாகக் காட்டும் வசதியொன்று செய்யப்பட்டுள்ளது.
எனினும், இது ஐபோன் செய்துகொடுத்துள்ள வசதி அல்ல என்பதும் இதுவொரு பிரத்தியேக மென்பொருள் என்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நடிகையின் தங்கைகளுக்கு வலைவீசும் டைரக்டர்கள்!

நடிகை ஒருவரின் 5 தங்கைகளுக்கு தமிழ் சினிமா டைரக்டர்கள் வலை வீசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்த நடிகையோ இந்த பொழப்பு என்னோட போகட்டும்; அவங்களாவது படித்து பெரிய அதிகாரி ஆகணும்  என்று கூறி நடிப்பு உலகத்துக்கு வர தடை போட்டு விட்டாராம். ஆறு பெண்ணை பெற்றால் அரசனும் ஆண்டி என்றொரு பழமொழி உண்டு. அப்படி 5 தங்கைகளுடன் பிறந்திருக்கிறார் நடிகை பூர்ணா. ஆனால் அவரது குடும்பம் இப்போது மிக மகிழ்ச்சியாக காலம் தள்ளிக் கொண்டிருக்கிறது என்றால் அதற்கு ஒரே காரணம் பூர்ணாதான்.

படித்துக் கொண்டிருந்த போதே ஸ்கூல் டிராமாவில் நடித்த பூர்ணாவை பார்த்த சினிமாக்காரர்கள் அப்படியே அள்ளிக் கொண்டு வந்தார்கள். தனது 5 தங்கைகளுக்காகவும் உழைக்க வேண்டும் என்று முடிவெடுத்த பூர்ணா படிப்பை விட்டுவிட்டு படத்தில் நடிக்க ஆரம்பித்தார். படங்கள் எதுவும் வெற்றி பெறாவிட்டாலும், எப்படியோ போராடி சொந்த ஊரில் பெரிய பங்களா கட்டிவிட்டார். இப்போது தனது தங்கைகளுடன் அந்த வீட்டில் சந்தோஷமாக இருக்கும் பூர்ணாவுக்கு ஒரே ஒரு கவலைதானாம். தங்கைகளையும் சிலர் நடிக்க அழைப்பது பொறுத்துக் கொள்ள முடியாமல் தவிக்கிறாராம் அம்மணி. வாய்ப்புகளுடன் தேடி வந்த டைரக்டர்களிடம், இந்த பொழப்பு என்னோட போகட்டும்; அவர்களாவது படித்து பெரிய பெரிய அதிகாரி ஆகணும். அவர்களை விட்டுடுங்களேன் என்று கெஞ்சாத குறையாக அனுப்பி வைக்கிறாராம்.

தமிழ்நாட்டில் அமைச்சர்கள் மாற்றம்?

தமிழ்நாட்டில் நவம்பர் முதல் வாரத்தில் அமைச்சரவை மாற்றம் இருக்கும் என்று உறுதியான தகவல்கள் வந்துக் கொண்டிருக்கின்றன.

அ.தி.மு.க. அமைச்சரவை அமைந்து இன்னும் ஆறு மாதங்கள் கூட முழுமை பெறவில்லை. அதற்குள் மூன்று முறை அமைச்சரவை மாற்றம் நிகழ்ந்துவிட்டது. அதாவது, இரண்டு மாதங்களுக்குள் மூன்று முறை அமைச்சரவை மாற்றம் நடந்ததும், சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்கியது. அதனால், அடுத்தக் கட்ட அமைச்சரவை மாற்றம் நடக்கவில்லை.
 
சட்டமன்றக் கூட்டத்தொடர் முடிந்ததும், உள்ளாட்சித் தேர்தல் வந்துவிட்டது. இதில் அ.தி.மு.க. தனித்து நின்று யாருமே எதிர்பாராத அளவுக்கு வெற்றியும் பெற்றுவிட்டது. உள்ளாட்சித் தேர்தலில் எங்காவது, கடுமையான தோல்வி கண்டிருந்தால், அம்மாவட்டத்தில் இருக்கும் அமைச்சர்களை மாற்றலாம் என்றால், அதற்கும் வாய்ப்பில்லை.
 
ஆனாலும், கடந்த சட்டமன்றத்தொடரில் அமைச்சர்களின் பணி மற்றும் நடவடிக்கைகளை கண்டு, சில பேரை மாற்றியே தீர வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா தீர்மானித்து விட்டதாக சொல்லப்படுகிறது.
 
இந்த அமைச்சரவை மாற்றத்தில், பதவியை இழக்கப் போகிறவர்கள் பட்டியலில் ஐந்து அல்லது ஆறு பேர் இருக்கலாம் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் சொல்கின்றன. அதன்படி கோகுல இந்திரா, சண்முகவேலு, உதயகுமார், சண்முகநாதன் ஆகிய இவர்களுடன் இன்னும் சிலர் பதவி இழக்கலாம். அதே நேரத்தில் சுகாதாரத்துறை அமைச்சராக இருக்கும் டாக்டர் விஜய் வேறு துறைக்கு மாற்றப்படலாம். தொழில்துறை அமைச்சராக இருக்கும் வேலுமணியும் வேறு துறைக்கு மாற்றப்படுவார் என்று சொல்லப்படுகிறது.

இந்த மாற்றங்கள் எல்லாம் நவம்பர் 3ம் தேதிக்கு பிறகு நடக்கும். ஏன், உடனே நடக்காதா என்று கேட்டால், அதற்கு கவர்னர் தேவையாயிற்றே என்று பதில் வருகிறது.
 
கவர்னர் ரோசய்யா, வரும் 30, 31 மற்றும் நவம்பர் 1ம் தேதிகளில் இந்திய கவர்னர் மாநாட்டில் பங்கேற்கிறார். இந்த கவர்னர் மாநாட்டுக் குழு தலைவராக, இந்தியாவில் இருக்கும் கவர்னர்களில் மிக குறைந்த வயதுடைய ரோசய்யா தான் நியமிக்கப்பட்டிருக்கிறார் என்பதுதான் மிகப்பெரிய தகவல்.
 
அவர் மாநாட்டை முடித்துக் கொண்டு வந்ததும், அமைச்சரவை மாற்றம் இருக்கும். புதிதாக அமைச்சர் பட்டியலில் இடம் பெறப் போகிறவர்கள் யார் என்பது, யாருக்குமே தெரியாது, முதல்வர் ஜெயலலிதாவைத் தவிர. யாரெல்லாம் அந்த அதிர்ஷ்டசாலிகள் என்பதை வரும் நவம்பர் மாதம் முதல் வாரத்தில் தெரிந்துவிடும்.

செயற்கை ரத்தம் விஞ்ஞானிகள் சாதனை

அனைத்து வகையான அறுவை சிகிச்சைகளுக்கும் ரத்தம் தேவைப்படுகிறது. அவசர தேவையின் போது உடனடியாக ரத்தம் கிடைக்காததால் பலர் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதை தடுக்க தற்போது இங்கிலாந்து விஞ்ஞானிகள் செயற்கை முறையில் ரத்தம் தயாரித்துள்ளனர். இவற்றை ஸ்டெம் செல்களில் இருந்து தயாரித்து இருக்கின்றனர்.

இங்கிலாந்தின் எடின்பர்க் மற்றும் பிரிஸ்டல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இதற்கான ஆய்வை மேற்கொண்டனர்.ஸ்டெம்செல்களில் இருந்து ஆயிரக்கணக்கான மில்லியன் சிவப்பு அணுக்களை உருவாக்கினர். அதை பரிசோதனை கூடத்தில் வைத்து செயற்கை ரத்தத்தை உருவாக்கினர்.

இந்த ரத்தம் 25 லட்சம் சிவப்பு அணுக்களை கொண்டது. இவற்றை மனித உடலில் செலுத்த முடியும். எந்தவிதமான நோய் தொற்றும் ஏற்படாது.இவை இன்னும் 2 ஆண்டுகளில் பயன்பாட்டுக்கு வருகிறது. இவற்றை இருதய ஆபரேசன், இருதய மாற்று ஆபரேசன் மற்றும் புற்று நோய் பாதித்தவர்களும் பயன்படுத்தலாம். இதன் மூலம் லட்சக்கணக்கான மக்களின் உயிர் பாதுகாக்கப்படும் என டாக்டர்கள் கருதுகின்றனர்

Tuesday, October 25, 2011

பீர் குடித்தால் எலும்பு வலுவடையும்

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் குறித்த ஆய்வு பிரிவினர் ஜொனாத்தன் போவெல் தலைமையில் மேற்கொண்ட ஆய்வில் முதுமையில் ஏற்படும் ஆஸ்டியோபோரோசிஸ் நோய்   பாதிப்பில் இருந்து பெண்களுக்கு பீர் பாதுகாப்பு அளிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

எலும்பின் உறுதிக்கு பீரின் பங்களிப்பு குறித்து ஆராயப்பட்டது. பீரில் உள்ள எத்தனால் எலும்புக்கு உறுதி அளிப்பதுடன் புதிய எலும்புகளின் பேரில் வளர்ச்சிக்கு உதவுவதும் தெரியவந்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள தகவல் வருமாறு:

மதுபானத்தை மருந்தாக எடுத்துக் கொண்டால் உடல் நலமாக  இருக்கும் என்பதை பல தொடர் ஆய்வுகள் வலியுறுத்தி வருகின்றன. இதன் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வில், பீரில் உள்ள சத்துகள் எலும்புக்கு வலு சேர்ப்பது உறுதியாகி உள்ளது. குறிப்பாக வயதான காலத்தில் பெண்களை தாக்கும் ஆஸ்டியோபோரோசிஸ் பாதிப்பில் இருந்து பீர் பாதுகாக்கிறதாம்.

பீரில் உள்ள எத்தனால் மற்றும் சிலிகான் பெரும்பாலான தாவர பயிர்களிலும் காணப்படுவதாகும். குறிப்பாக அவரை, மொச்சை உள்ளிட்ட தானியங்களில் அதிக அளவில் இந்த சத்து உள்ளது. இது எலும்பு தேய்மானத்தை தடுப்பதுடன் புதிய எலும்புகள் வலுவாக  வளரவும் உதவும்.

பெண்களின் ஈஸ்ட்ரோஜன் சுரப்பியில் சிலிகான் கலப்பு இருக்கும். ஈஸ்ட்ரோஜன் அளவு மாதவிடாய் காலங்களில் பாதிப்படையும். அந்த நேரத்தில் மாத்திரை, மருந்துகள் வாயிலாக இந்த சுரப்பியின் குறைபாட்டை ஈடுசெய்வது மிகமிக அவசியம். கவனிக்காமல் விடும் பட்சத்தில் எலும்புகள் நலிவடைந்து ஆஸ்டியோபோரோசிஸ் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். இத்தகைய சமயங்களில் பீரை தினமும் சிறிதளவு மருந்தாக எடுத்துக் கொள்ளலாம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

 உணவுகளில் இருந்து கிடைக்கும் சிலிகான் அளவைவிட பன்மடங்கு அதிகமாக பீரில் இருந்து கிடைப்பதே இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. பெண்களுக்கு தினமும் 8 மில்லிகிராம் அளவு சிலிகான் அவசியமாகிறது. இந்த தேவை குறைந்த அளவு பீரில் இருந்து எளிதாக கிடைக்கும். மாதவிடாய் நிற்கும் பெண்களுக்கு இது ஒரு வாய்ப்பு   என்றே கூறலாம். அவர்கள் தினமும் ஒரு டீஸ்பூன் என்ற அளவில் பீர் அருந்துவது எலும்புகளுக்கு வலு சேர்க்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா கைது? தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்??

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீது நடைபெற்றுவரும் சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களுர் நீதிமன்றத்தில் பல வருடங்களின் பின் நடந்து வருகிறது.

92 சாட்சிகளிடமும் விசாரண முடிந்து , ஜெயா குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் தமிழகத்தின் அடுத்த முதல்வராக யார் பொறுப்பேற்பது? என்பது அ.தி.மு.க வுக்குள் பெரும் மௌனப் புயலை உருவாக்கியுள்ளது. இது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஒருவரிம் வினவியபோது ” கடந்த 14 வருடமாக நடைபெறும் இவ்வழக்கில் அம்மா அவர்கள் தனது தகுந்த பாதுகாப்புக் கருதி பெங்ளுர் நீதிமன்றுக்கு வழக்கை மாற்றும்படி மனுச் செய்தார். அதன் பின் கழகத்தின் வேலைப்பழு காரணமாக ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். தற்போது ஆஜராகியுள்ளார்.

இந்நிலையில் அம்மாவுக்குப் பாதகமாக தீர்ப்பு வந்தால் அம்மாவால் அவர் ஓர் குற்றவாளி என்ற அடிப்படையில் முதல்வராக இருக்க முடியாது. இவ்வாறான நிலை ஏற்படின் அம்மாவுக்கு விசுவாசமான ஆள் ஒருவரையே அவர் நியமிப்பார் ” என அவர் குறிப்பிட்டார்.
அப்படியாயின் ஜெயாவின் இன்றைய விசுவாசி யார்? இதற்கு கிடைத்த ஒரே பதில் அமைச்சர் சின்னையா என்பது தான். கர்நாடக முதல்வர் எடியூரப்பாவையே சிறைக்குள் தள்ளிய நீதித்துறை தமிழக முதல்வரை குற்றவாளி என்று கருதினால் கட்டாயம் தண்டனை வழங்குவார்கள். இதற்கு மேலதிகமாக எடியூரப்பாவின் ஆதரவாளரும் பிரச்சனையை கிளப்புவார்கள் என்கின்றனர் நோக்கர்கள். எது எவ்வாறெனினும் தமிழகத்தின் மானம் பெங்களுர் சிறப்பு நீதிமன்றின் கைகளிலேயே தங்கியுள்ளது.

தீபாவளி ஸ்பெஷல் - மட்டன் மிளகுக் குழம்பு


தீபாவளி ஸ்பெஷல் தேவையானவை- (4 பேருக்கு)

முத்தல் இல்லாத ஆட்டிறைச்சி- ½ கிலோ
n3
சின்ன வெங்காயம்- 100 கிராம் 
நாட்டுத் தக்காளி- 3
இஞ்சி-1 சிறுதுண்டு 
பூண்டு- 10 பல் 
புளி-1 சுளை 
காய்ந்த மிளகாய்- 4
மிளகு- 2 டீஸ்பூன் 
கடுகு,சீரகம்- 1 டீஸ்பூன் 
காய்ந்த மல்லி- 2 டீஸ்பூன் 
தேங்காய்ப் பூ -1 கை பிடியளவு 
ஞ்சள் தூள், உப்பு, எண்ணெய்- தேவையான அளவு.



செய்முறை:-
மிளகாய், மிளகு, சீரகம், மல்லி, தேங்காய் பூ வறுத்து அரைத்துக் கொள்ளவும். தக்காளி, வெங்காயம் நறுக்கி கொள்ளவும்.

குக்கரில் எண்ணெய் காய வைத்து கடுகு, சீரகம், தாளித்து, இஞ்சி பூண்டைத் தட்டிப் போட்டு வதக்கவும். பச்சை வாடை போனவுடன் வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கவும். கழுவி வைத்து கறித்துண்டுகளைப் போட்டு உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கிண்டவும். அரைத்து வைத்துள்ள மசாலாவையும் போட்டு, 2 டம்ள்ர் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி வெயிட் போட்டு 2 சவுண்டு வேக வைத்து இறக்கவும்.
ருசி பார்த்து 1 சுளை புளியைக் கரைத்து ஊற்றி மேலும் ஒரு கொதி கொதிக்க வைத்து பயன்படுத்தவும்

தூக்கமின்மையால் சர்க்கரை நோய்

சர்க்கரை சுவைத்தான் இனிக்கிறது. சர்க்கரையின் பெயரை கேட்டதுமே, நாவில் எச்சில் ஊறுகிறது. ஆனால், ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு அதிகமாகிவிட்டால் கசக்கிறது. ஏன்?

நாட்டில் இருக்கும் அத்தனை வியாதிகளுக்கும் மூல வியாதி சர்க்கரை நோய் என்றே சொல்லலாம். ரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பின் காரணமாக  இருதய நோய் வரலாம். புற்று நோய் வந்தால், அது உடலில் ஏதாவது ஒரு பகுதியை பாதிக்கும். ஆர்த்தோ மற்றும் நரம்பு சம்பந்தமான வியாதிகள் வந்தாலும், அதற்கு தீர்வுகளும் இருக்கின்றன.

ஆனால், ஒரு முறை சர்க்கரை வந்தால்... அவ்வளவுதான். மேலே சொன்ன அத்தனை வியாதிகளும் வந்துக் கொண்டே இருக்கும். சர்க்கரை நோய் கண்ணை பாதிக்கும். கொழுப்பை அதிகரிக்கச் செய்து, ரத்த அழுத்தத்தை உருவாக்கும். இதனால், இருதய நோய் வர வாய்ப்புண்டு. நரம்பு மண்டலத்தை பாதித்து, கோமா நிலைக்கு தள்ளிவிடும். நாள் பட்ட சர்க்கரை வியாதிக்காக மருந்துகளை தொடர்ந்து எடுப்பதால், புற்று நோயும் வர ஆபத்து அதிகம். அதையெல்லாம் விட,  நினைத்ததை சாப்பிட முடியாது. அளவோடு சாப்பிட வேண்டும். நேரத்துக்கு சாப்பிட வேண்டும். குறைந்த அளவு உணவு மட்டுமில்லாமல், இத்தனை மணி நேரம் தூங்கியாக வேண்டும்.

என்னடா... இத்தனை தொல்லை. ஏன் இந்த சர்க்கரை நோய் வருகிறது. முதலில் சர்க்கரை நோயை பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்.
ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவைச் சரியாக வைத்திருக்க உதவுவது இன்சுலின். வயிற்றில் இருக்கும் கணையம் என்ற உறுப்பு, இந்த இன்சுலினைப் போதுமான அளவு சுரக்கிறது. இந்தக் கணையத்தின் இயக்கம் பழுதின்றி நடக்கும் வரை எந்தப் பிரச்னையும் தோன்றுவதில்லை. கணையம் பழுதடையும் போதுதான் பிரச்னையே ஆரம்பமாகிறது. காரணம், இன்சுலினைப் போதுமான அளவு சுரக்கும் தன்மையை அது இழந்துவிடுகிறது. அதனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகமாகி விடுகிறது. இந்த நிலையைத் தான் சர்க்கரை நோய் அல்லது நீரழிவு அல்லது டயாபடீஸ் என்று குறிப்பிடுகிறோம்.

இந்த சர்க்கரை நோய் எதனால் வருகிறது. குடும்பத்தில் தாய், தந்தை ஆகிய யாராவது ஒருவருக்கு அல்லது தாத்தா, பாட்டிக்கு சர்க்கரை இருந்தாலும் பரம்பரை வியாதியாக வரும் நிலை இருக்கிறது. உணவுக் கட்டுப்பாடின்றி இருக்கும் நபர்களை சர்க்கரை தாக்கும். இதில் எதுவுமே இல்லாமலும் கணையம் பழுதுபட்டால், சர்க்கரை நோய் வரும்.
இதெல்லாம் கூட பரவாயில்லை. ஸ்டெரஸ் அதாவது மன அழுத்தம் காரணமாக கூட சர்க்கரை வருகிறதாம். டாக்டர்கள் சொல்கிறார்கள். இதுமட்டுமா, குறைந்த நேரமே தூங்கிக் கொண்டிருக்கும் நபர்களுக்கும் சர்க்கரை நோய் தாக்குவது தான் கொடுமை.

சமீப காலங்களில் 30 முதல் 45 வயதுக்குள் சர்க்கரை நோய் தாக்கும் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதற்கு காரணமாக டாக்டர்கள் கூறுவது, தூக்கமின்மை. அடுத்து மன அழுத்தம்.
மனிதர்களுடைய தினசரிச் செயல்களில் தூக்கம் மிக முக்கிய இடத்தை பெறுகிறது. ஒருநாளைக்கு 6 மணி நேரமாவது நல்ல தூக்கத்தில் இருக்க வேண்டியது அவசியம். களைத்துப்போன உடலுக்கும் மனதிற்கும் நல்ல தூக்கத்தால்தான் புத்துணர்ச்சி தரமுடியும். குறிப்பிட்ட நேரத்தில் படுக்கைக்குப் போவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.
தினமும் குறிப்பிட்ட நேரத்துக்கு தூங்கி, ஓய்வெடுக்காமல் இருந்தால் மறுநாள் மனிதனால் ஒழுங்காக வேலை செய்ய முடியாது. நாள் முழுவதும் உழைக்கிற நம்முடைய உடல் உறுப்புகள் ஓய்வெடுக்கத் தான் இந்தத் தூக்கம் அவசியமாகிறது.

எனவே ஒவ்வொருவருக்கும் தூக்கம் கொள்வது மிக முக்கியமானது. சாப்பிடாமல் கூட சில நாட்களுக்கு உயிரோடு இருந்து விடலாம். ஆனால் தூக்கம் கொள்ளாது விழித்திருக்க முடியாது. ஒருவேளை தூக்கம் கொள்ள முடியலை என்றால் என்ன நடக்கும்?

சில நாட்களுக்கு மனிதன் நித்திரை கொள்ளாமல் இருந்தால் மனித ரத்தத்தில் இருக்கும் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை குறைவடைந்து நோய் எதிர்ப்புத் தன்மையும் குறையும். தசைகளின் வலிமை குறையும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருக்காது. உடல் வெப்பநிலை மாறுபடும். இதுமாதிரி உடலுக்குச் சிக்கலை தூக்கப் பிரச்னை ஏற்படுத்தும். உள்ளத்துக்கும் சிக்கலை ஏற்படுத்தும். தூக்கமின்மையால், ரத்தச் சோகை ஏற்படும். மலச்சிக்கலும் வரும். மேலும் தூக்கமின்மையால் ரத்தத்தில் இருக்கும் மன அழுத்தத்துக்கு காரணமான கார்ட்டிசோல் என்கிற ரசாயனத்தின் அளவு அதிகரிக்கும்.

இதனால் ஞாபகசக்தி குறைவு, வேலைகளில் தவறுகள் போன்ற பல்வேறு  பிரச்னைகள் ஏற்படும். உடலையும், மனதையும் ஒருசேர பாதிக்கிற ஆற்றல் தூக்கமின்மைக்கு உண்டு. எனவே தினமும் குறிப்பிட்ட நேரத்துக்கு தூங்கி ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்

கடாபி கொலை - ராஜபக்சே அதிர்ச்சி

லிபிய அதிபராக இருந்து மக்களாலும், புரட்சிப் படையினராலும் விரட்டப்பட்டு வீழ்த்தப்பட்ட மும்மர் கடாபியின் மரணம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியிருப்பதால் இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா.வுக்கு இலங்கை அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

கடாபியின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர் ராஜபக்சே. கடந்த 2007ம் ஆண்டு இவர் லிபியாவுக்குப் போயிருந்தார். அப்போது கடாபியை சந்தித்துப் பேசினார். அதேபோல அவரது மகன் நமல் ராஜபக்சேவும் கடந்த ஆண்டு லிபியா போய் கடாபியை சந்தித்துப் பேசினார்.

இந்த நிலையில் கடாபியை புரட்சிப் படையினர் நடு ரோட்டில் இழுத்துச் சென்று கொலை செய்த செயல் இலங்கை அரசை அதிர வைத்துள்ளதாம், பீதியடைய வைத்துள்ளதாம்.

இந்தப் பின்னணியில் இலங்கை வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கை விடுத்துள்ளது. அதில், கடாபி பிடிபட்ட விதம், அவரது மரணம் தொடர்பான சூழல் பல்வேறு சந்தேகங்களை எழுப்புவதாக உள்ளது. எனவே இதுகுறித்து விளக்கம் தேவைப்படுகிறது. இதுகுறித்து விசாரணை நடத்த ஐ.நா. சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

கடாபியின் நண்பனான ராஜபக்சேவின் அறிவுரைப்படியே இந்த அறிக்கையை இலங்கை வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ளதாக தெரிகிறது.

நீண்ட காலமாகவே இலங்கையுடன் நல்லுறவைப் பேணி வந்தவர் இந்த கடாபி. 1976ம் ஆண்டு கொழும்பில் நடந்த அணி சேரா நாடுகள் மாநாட்டுக்காக வந்திருந்தார். இப்போது அவரது மரணத்தால் ராஜபக்சே ஆடிப் போயுள்ளதாக தெரிகிறது